தமிழர் திருநாளாம் பொங்கல் நாளுக்கு முதல் நாள் நாம் "போகிப்பண்டிகை" கொண்டாடுகிறோம். இந்நாளில் சில பழைய பொருட்களை எரிப்பதென்பது "பழையன கழிதல்" என்ற வழக்கத்திற்கான அடையாளமாகும்.
இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள்.
பெரும்பாலும், நமது கிராமங்களில் கடைபிடிக்கப்படும் இப்பழக்கம் சுற்றுச் சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும்.
ஆனால், தற்சமயம் போகியன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருட்களை எரிக்கையில் நச்சும் புகைமூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
நச்சுக்காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுபட்டு நம் நகரமே கருப்பு நகரமாக மாறுகிறது. நச்சுப் புகை கலந்த பனி மூட்டத்தால் ஆகாய விமானங்கள் புறப்படுவதற்கும், சாலை போக்குவரத்திற்கும் தடை ஏற்படுகிறது.
இதுபோன்ற செயல்கள் மூலம் காற்றை மாசுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். மேலும், உயர்நீதி மன்றம், பழைய மரம், வறட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடை விதித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை காவல்துறை மூலம் எடுக்கப்படும்.
எனவே, போகிப் பண்டிகையன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருட்களை எரிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
போகிப் பண்டிகை நமக்கு இனிய ஆரம்பமாக இருக்கட்டும். அன்றைய தினம் குப்பையை முறைப்படி ஒழித்து பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும், சுற்றுசூழலுக்கு மாசு இல்லாமலும் கொண்டாடுவோம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.