மத்திய அரசு மருத்துவத் துறையில் எக்சிட் தேர்வை கட்டாயம் என அறிவித்துள்ளது. இந்நிலையில், தங்களுக்கு இத்தேர்வு தேவையற்றது எனக் கூறி கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சங்கத்தினர் இணைந்து இன்று பேரணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக, அக்கல்லூரி மாணவர்கள் கவுன்சில் தலைவர் விட்மின் அறிவுமதி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
5.5 வருடம் மருத்துவம் படித்த பின் தான் நாங்கள் தேர்வெழுதி வெற்றி பெறுகிறோம். இந்த 5.5 வருட இடைப்பட்ட காலகட்டத்தில் 13 தேர்வுகள் நடைபெறுகிறது. இவை அனைத்தும் மிக கடினமான தேர்வுகள் ஆகும்.
அதை முடித்தபின்தான் ஒரு மாணவர் மருத்துவர் ஆகிறார். மேலும், அப்படிப்பு முடிந்து ஒரு வருடகாலம் பயிற்சி மருத்துவராக செயல்பட வேண்டும்.
இந்நிலையில், மத்திய அரசு எக்சிட் தேர்வை கட்டாயம் என அறிவித்துள்ளது. இந்த தேர்வு முறையால் தமிழகத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்.
ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ள மருத்துவப்படிப்பு முறையை இந்தியாவிற்குள் நுழைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. வெளிநாட்டிற்கு சென்று ஏராளமான பணம் செலுத்தி மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுகின்றனர். இவ்வாறு வெளிநாட்டு மருத்துவப் படிப்புடன் நமது மாணவர்களையும் ஒப்பிட்டு இதுபோன்ற தேர்வுகள் நடத்துவது தவறு.
ஏற்கனவே, இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில், தற்போது எக்சிட் தேர்வினை நடத்துவது மூலம் மேலும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறையும். உடனடியாக எக்சிட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்" என அவர் கூறினார்.

முன்னதாக, கோவை அரசு மருத்துவமனை முன்பு தொடங்கிய இப்பேரணி கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி சாலை வழியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.