ஜல்லிக்கட்டு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசால் சட்ட திருத்தம் கொண்டு வர முடியாது எனவும், ஜல்லிக்கட்டு போட்டி நடக்க தமிழக அரசு ஒரு அரசாணையை கொண்டு வர வேண்டுமென பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன் கூறியதாவது:-
பொங்கல் விடுமுறை என்பது 15 ஆண்டு காலமாக சிறப்பு பட்டியலில் தான் இருப்பதாகவும், புதிதாக எந்த அதிகாரப்பூர்வ பட்டியலில் இருந்தும் நீக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகை இந்தாண்டு சனிக்கிழமை வருவதால் விடுமுறை நாளில் விடுமுறை அளிப்பதற்கு பதிலாக வேறு நாள் எடுத்துக் கொள்ளலாம் என கூறியதை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கியதாக தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகவும், அவசர அவசரமாக போராட்டம் நடத்துபவர்கள் முழுமையான தகவலை சேகரித்து போராட வேண்டுமென தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசால் சட்ட திருத்தம் கொண்டு வந்தாலும் சட்ட ரீதியாக அனுமதி வாங்க முடியாது எனவும் கூறிய அவர், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு ஒரு அரசாணையை பிறப்பிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகள் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடப்பதற்கு மத்திய அரசும், தமிழக பா.ஜ.க வும் முழு ஒத்துழைப்பு அளிக்குமெனவும், அதனை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் உணர்வுபூர்வமாக ஆதரவு அளிப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.
பா.ஜ.க தமிழர்களுக்கு எதிரானது என சித்தரிக்க சூழ்ச்சிகள் நடப்பதாகவும், அதற்கு சில தலைவர்கள் துணை போகிறார்கள் எனவும் குற்றம்சாட்டிய அவர், தமிழகத்திற்கு பல நன்மைகளை மத்திய பா.ஜ.க அரசு செய்து வருவதாக கூறினார்.