மத்திய அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த போதிய நிதி தேவை என்பதால் தான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் நாட்டில் பெட்ரோலின் விலையை குறைக்க முடிவதில்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அவர், 13 கோடியாக இருந்த கேஸ் இணைப்பு இரண்டரை ஆண்டுகளில் 19 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், 2019-க்குள் நாடு முழுவதும் 5 கோடி பேருக்கு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு எல்.பி.ஜி. இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் கேஸ் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டிருந்ததில் 1.5 கோடி பேருக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்தின் 3 மாதங்களுக்கு முன்பே இணைப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஆண்டுக்கு 5 லட்சம் பெண்கள் வீட்டில் ஏற்படும் விபத்தில் உயிரிழப்பதாக கூறிய அவர், வீடுகளில் ஏற்படும் விபத்துகளுக்கு 6 லட்சம் வரை காப்பீடு பெறலாம் எனவும், காப்பீடு தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்கும் வகையில் எல்.பி.ஜி. அட்டையில் அந்த அறிவிப்பை பெரிதாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
எல்.பி.ஜி. பயன்பாட்டில் தமிழகம் முதன்மையாக உள்ளதாக கூறிய அவர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தர்மபுரி, அரியலூர், திருவாரூர், விழுப்புரம், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்கள் தேசிய சதவிகிதமான 71 சதவிகிதத்தை விட குறைவாக உள்ளதாகவும், 100 சதவிகிதம் மின்னணு பரிவர்த்தனை வசதியை கொண்ட நகரங்களில் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள 53 ஆயிரம் பெட்ரோல் பங்க் மூலம் 2 ஆயிரம் கோடி மதிப்பிலான பெட்ரோலியம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள 4554 சில்லறை விற்பனை நிலையங்களில் 4076 நிலையங்களில் மின்னணு பரிவர்த்தனை வசதி உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு தமிழகத்தில் 5 சதவிகிதமாக இருந்த மின்னணு பரிவர்த்தனை தற்போது 28 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக கூறிய அவர், எல்.பி.ஜி. பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 2017க்குள் நாடு முழுவதும் தற்போது 18 ஆயிரம் சமையல் எரிவாயு வினியோகஸ்தர்களின் எண்ணிக்கையை 10 ஆயிரம் கூடுதலாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் அப்போது குறிப்பிட்டார்.