கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குனரகம் மற்றும் 361 டிகிரி மைன்ட்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய இருபெரும் நிறுவனங்களுக்கிடையே ஜனவரி 10ம் தேதியன்று (இன்று) ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
வேளாண் பல்லைக்கழக துணைவேந்தர் முனைவர் கு.இராமசாமி மற்றும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்குனர் முனைவர் பெ.சாந்தி ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் இரா.அனந்தகுமார் மற்றும் 361 டிகிரி மைன்ட்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் தலைவர் சாய்சுமன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தப்படி பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் பாடத்திட்டங்களான முதுநிலை வணிக மேலாண்மை, முதுநிலை பட்டயப் படிப்பான எரிசக்தி மேலாண்மை மற்றும் சான்றிதழ் பாடங்களான, வீடு மற்றும் மாடித்தோட்டம், மூலிகை மற்றும் வாசனைப் பயிர்கள் சாகுபடி மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு ஆகியவை இணையதளம் மூலமாக வழங்கப்படும்.
வீடு மற்றும் மாடித்தோட்ட விவசாயத்தில் பெருகி வரும் நகர்ப்புற வாசிகளின் ஆர்வத்தின் காரணமாகவும், இளைஞர்களின் கல்வித் தகுதியை அதிகரிக்கும் வகையிலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமானது இப்புதிய முயற்சிக்கு வித்திட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களை இணையதள வழியாக செயல்படுத்துவதற்குரிய தொழில்நுட்பங்களை 361 டிகிரி மைண்ட்ஸ் வழங்க இருக்கிறது.