பொங்கல் பண்டிகை பொது விடுமுறை தின பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், தமிழர்கள் மத்திய அரசால் உதாசீனப்படுத்தப்படுவதோ புறக்கணிக்கப்படுவதோ இல்லை என்பதும் அவர்களது கோரிக்கை உடனே கவணிக்கப்படும் என்பது தற்போது தெளிவு படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக பாஜகவின் அழுத்தம் காரணமாகவே மத்திய அரசு பொங்கலை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது என்றும், நேற்றைய தினம் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் இதுகுறித்து பேசி அழுத்தம் தந்ததாகவும் குறிப்பிட்டார்.
தமிழர்கள் உதாசீனப்படுத்தப்படுவதோ புறக்கணிக்கப்படுவதோ இல்லை என்பதும், அவர்களது கோரிக்கை உடனே கவணிக்கப்படும் என்பதும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது எனவும், மக்கள் பிரச்சனையில் பாஜக என்றுமே தமிழகத்திற்கு எதிராக இருக்காது என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தால் மட்டும் போதாது எனவும், விவசாயிகளின் அடிப்படை தேவைகளை அறிந்து ஆறுகளை தூர் வாருதல், மணல் அள்ளுவதை தடுத்தல் மற்றும் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துதல் போன்றவற்றிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
பொங்கல் விடுமுறை என்பது 15 ஆண்டு காலமாக சிறப்பு பட்டியலில் தான் இருப்பதாகவும், புதிதாக எந்த அதிகாரப்பூர்வ பட்டியலில் இருந்தும் நீக்கவில்லை எனவும் தெரிவித்தார்.