தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் விவசாயிகள் தற்கொலை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு வேளாண்மை செழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் வழக்கறிஞர்கள் பச்சை சட்டை அணிந்து கோவை நீதிமன்ற வளாகத்தில் பொங்கலை கொண்டாடினர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒவ்வோரு ஆண்டும் கோவை நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன் ஒருபகுதியாக குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் 9-ஆம் ஆண்டு பொங்கல்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வின் போது வழக்கறிஞர்கள் சர்க்கரை பொங்கல் வைத்து அனைத்து வழக்கறிஞர்களுக்கும் கொடுத்தும், மாட்டின் கொம்புகளுக்கு சாயம்பூசி அலங்கரித்தும் வழக்கறிஞர்கள் வழிப்பட்டு உற்சாகத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
மேலும், வழக்கறிஞர்களும் இளைய தலைமுறையினரும் பொங்கல் விழாவை பற்றி தெரிந்துகொள்ளவும் இதை பின்பற்றவும் வேண்டும் என்பதற்காக தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையானது நீதிமன்ற வளாகத்தில் கொண்டாடப்பட்டு வருவதாகவும் குற்றவியல் வழக்கறிஞர்கள் தெரிவித்தார்.
தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் விவசாயிகள் தற்கொலை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு வேளாண்மை செழிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு பச்சை சட்டை அணிந்து பொங்கலை கொண்டாடினர். மேலும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.