வால்பாறை, சிறுவர் பூங்கா பகுதியில் செயல்பட்டு வந்த சுப்பிரமணியம் என்பவரின் விறகு மற்றும் பிளைவுட் கடையில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதில் அருகில் இருந்த முத்துமணி என்பவரின் டெய்லர் கடையில் வைத்திருந்த இயந்திரம் மற்றும் பொங்கல் பண்டிகைக்கு வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த துணிகள், பணம் மற்றும் சான்றிதழ்கள், அனைத்தும் முற்றிலும் தீக்கிரையானது.

தொடர்ந்து எரிந்த தீ அருகில் இருந்த அகஸ்டின் என்பவரின் டெய்லர் கடையிலும் பரவியுள்ளது. இதில், அந்த கட முழுவதம் எரிந்துள்ளது. தொடந்து, அருகில் இருந்த கலைச்செல்வன் என்பவர் நடத்தி வந்த ஸ்டிக்கர் கடையில் வைக்கப்பட்டிருந்த ஸ்டிக்கரிங் இயந்திரம் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவையும் எரிந்து நாசமானது.
தீ கொழுந்து விட்டு எரிந்ததைக் கண்டு அருகாமையில் வசிப்பவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், தீயணைப்பு வாகனத்தில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் குறித்த நேரத்தில் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்த தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைத்தனர்.
சரியான நேரத்தில் தீயணைப்புத்துறை வந்து தீயை அணைத்திருந்தால் பாதியளவு சேதத்தை குறைத்திருக்கலாம் எனவும் தீயணைப்பு துறையினர் எல்லா நேரங்களிலும் தயாராக இருந்து இதுபோன்ற விபத்துகளின் போது ஏற்படும் சேதங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.