ஜல்லிகட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்பதை உணர்த்தும் விதமாக கோவையை சேர்ந்த தங்க நகை தொழிலாளி ஒருவர் 300 மில்லிகிராம் எடையில் ஜல்லிகட்டு காளையை வீரர் அடக்குவதை போன்ற மிகச்சிறிய அளவில் வடிவமைத்துள்ளார்.

கோவையை சேர்ந்த தங்க நகை தொழிலாளியான ராஜா மிக சிறிய அளவிலான நகைகளை வடிவமைப்பதில் ஆர்வம் கொண்டவர். ஜல்லிகட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் இளைஞர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஜல்லிகட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் விதமாக 300 மில்லிகிராம் எடையில் மிகச்சிறிய அளவில் ஜல்லிகட்டு போட்டியினை வடிவமைத்துள்ளார். வீரர் ஒருவர் ஜல்லிகட்டு காளையை அடக்கும் விதமாக தீக்குச்சியின் மேல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வடிவமைப்பு மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிகட்டினை அனுமதிக்க மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதுவரை போராட்டங்கள் ஓயாது என்பதை உணர்த்தும் விதமாக இந்த நுண்ணிய சிற்பத்தினை வடிவமைத்து இருப்பதாக தங்க நகை தொழிலாளி ராஜா தெரிவித்தார்.