தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் 06.02.2017 முதல் 28.02.2017 வரை நடைபெறுகிறது. 9 மாதம் முதல் 15 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஹரிஹரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (13.01.2017) பொது சுகாதாரத்துறை மூலம் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுவது குறித்து முன்னேற்பாடு பணிகள் தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்; தமிழகத்தில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் 06.02.2017 முதல் 28.02.2017 வரை நடத்த உத்தரவிட்டு அதற்கேற்ப முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுமார் 7.8லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக சுகாதாரத்துறையின் மூலம் 400க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத் துறையின் மூலம் 966 பணியாளர்களும், இம்முகாமில் பங்குபெற்று பணியாற்ற உள்ளார்கள். மேலும் அனைத்து பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், மற்றும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாவட்ட காவல்துறை, ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், இந்திய செஞ்சிலுவைச்சங்கம், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் இச்சிறப்பு முகாம் குறித்து, பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிப்பதுடன், போதிய அளவு விழிப்புணர்வினை முன்னரே ஏற்படுத்திட வேண்டும், அதேபோல், பள்ளிகளில் மாணவ மாணவியர்களிடமும் இதன் அவசியத்தினை தெரிவித்து வீட்டிலுள்ள பெற்றோரிடம் தெரிவித்திட செய்திட வேண்டும். பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது மட்டுமின்றி பள்ளிகளுக்கு வராத குழந்தைகளுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதற்கு பெற்றோர்களும் உறுதுணையாக இருந்து மாவட்டத்தில் ஒரு குழந்தைகூட விடுபடாத வகையில் தடுப்பூசி போட்டு ஆரோக்கியத்தினை பாதுகாத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் பொதுசுகாதாரத்துறை துணை இயக்குநர் பானுமதி, இந்திய மருத்துவசங்கச் செயலர் சண்முகசுந்தரம், மாநகர சுகாதார அலுவலர் சந்தோஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.