தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மூன்று மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்குவது பவானி ஆறு. நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகி கேரள மாநிலம் வழியாக மீண்டும் தமிழகத்திற்கு வரும் இந்த ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளை கட்டுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி கடந்த சில ஆண்டுகளாக பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அம்மாநில அரசு தடுப்பணை கட்ட முயற்சிப்பதும் தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு போராட்டங்களையடுத்து தற்காலிகமாக கைவிடப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக கேரள எல்லையான ஆனைக்கட்டியிலிருந்து 30 வது கிலோ மீட்டர் தொலைவில் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அடுத்த தாவளம் செல்லும் சாலையில் தேக்கோட்டை எனும் இடத்தில் சுமார் 12 அடி உயரத்தில் தடுப்பணை கட்டும் முதல்கட்ட பணியை துவங்கியுள்ளது கேரள அரசு. அதற்காக ஜல்லி, மணல், உள்ளிட்ட கட்டுமான பொருட்களை அங்கு குவித்துள்ள கேரள அதிகாரிகள் ஜே.சி.பி இயந்திரத்தையும் நிறுத்தி வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து க.க.சாவடி பகுதியில் ம.தி.மு.க சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது கேரள அரசு பேருந்தை வழி மறித்ததுடன் ம.தி.மு.க.வினர் சாலையில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர். முல்லைப்பெரியாறு, சிறுவானி ஆறு, பவானி ஆறு என தொடர்ந்து நீராதார பிரச்சிணைகளில் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.க.வை சேர்ந்த 35 பேரை போலீசார் கைது செய்தனர்.