“உழவர் திருநாளாம் தமிழர் நன்னாளாம்” என அழைக்கப்படும் பொங்கல் விழா கிராமிய கலைநயத்துடன் வெஸ்டெர்ன் காட்ஸ் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக பள்ளி தாளாளர் ஹேமலதா சசிக்குமார் தலைமை தாங்கினார். ஒன்பதாம் வகுப்பு மாணவி ரிதன்யா வரவேற்புரை நிகழ்த்தினார். பின்பு அனைவரையும் வரவேற்கும் விதமாக பள்ளி மாணவிகள் பொங்கல் பானையை நடுவே வைத்து கூட்டமாக கூடி நின்று கும்மியடித்து குதுகலமாக பொங்கல் திருநாளை வரவேற்றனர்.
இத்திருநாளன்று பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் தமிழகப் பாரம்பரிய ஆடைகளை அணிந்து தமிழகப் பாரம்பரியத்தை பறைசாற்றினர். மேலும் பள்ளி வளாகம் முழுவதும் மாவிலைத் தோரணங்கள், வண்ணக் கோலங்கள், காப்பு கட்டுதல், கரும்பு கட்டுதல் என பல்வேறு அலங்காரத்துடன் அமைக்கப்பட்டிருந்தது.

தமிழகப் பாரம்பரியப் போட்டிகள்:
ஆறாம் வகுப்பைச் சார்ந்த மாணவிகள் பொங்கல் புதுநாளின் புதுப்பொழிவினை வில்லுப் பாட்டின் மூலம் விவரித்த தன்மை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பின்பு பள்ளியில் உள்ள நான்கு வகைப் பிரிவுகளான அக்னி, ப்ரித்வி, ப்ரம்மோஸ் மற்றும் திரிசூல் மாணவர்களுக்கு தமிழகப் பாரம்பரிய போட்டிகள் நடத்தப்பட்டன. முதலில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் காளைபோல் வேடமணிந்து 400 மீட்டர் தூரத்தை ஓடிக் கடந்த சென்றனர். பின்பு நான்கு பிரிவுகளில் இருந்தும் ஒவ்வொரு மாணவர் காளைபோல் வேடமணிந்து ஜல்லிக்கட்டுக் காளைபோல் நின்றமை அனைவரின் கண்களைக் கவர்ந்தனர். மாணவர்களின் பாதுகாப்பு வேண்டி ஒரு வட்டம் வரையப்பட்டு காளையை வட்டத்திற்கு வெளியே விரட்டும் வீர விளையாட்டாக கொண்டாடப்பட்டமை தமிழனின் வீரத்தை விளையச்செய்வதைப் போன்று அமைந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து உறி அடி நடத்தப்பெற்றது. இதில் மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் அனைவரும் பங்கேற்று கண்ணைக் கட்டிக்கொண்டு உறி அடித்தனர். பின்பு மாணவர்கள் தனித் தனித் குழுக்களாகப் பிரிந்து கயிறு இழுத்து தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து வழுக்குமரம் ஏறும் போட்டி நடைப்பெற்றது. சுமார் 15 அடி உயரமுள்ள
பாக்கு மரத்தில் விளக்கு எண்ணெய் ஊற்றப்பட்டு வழுக்கிய நிலையில் உள்ள மரத்தில் மாணவர்கள் வழுக்கி வழுக்கி ஏறி தன்னுடைய வலிமையை வெளிப்படுத்தியமை தமிழனின் சிறப்பம்சத்தைக் காட்டியது.
தமிழக பாரம்பரிய விளையாட்டுகள்:
பள்ளி மாணவிகளுக்கு நொண்டி, பாண்டி, பரமபதம், தட்டாங்கல், ஆகிய பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன. நொண்டி மாணவர்களுக்கு அக்குபஞ்சர் வைத்தியத்தையும், பாண்டி கணிதத்திறனுக்கும், பரமபதம் வாழ்வின் ஏற்ற இறக்கத்தையும், தட்டாங்கல் கை விரலுக்கு தேவையான உடற்பயிற்சியையும் தரும் என்பதை விளையாட்டின் மூலம் விளங்கச் செய்தமை வியப்பிற்குரியதாக அமைந்தது. பள்ளி மாணவர்களுக்கு பம்பரம், பச்சைக் குதிரை, பிள்ளையர் பந்து போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டன.

பொங்கல் விழா:
உலக நாயகனான முதல் கடவுளாகக் கருதப்படும் சூரிய தேவனுக்கு படையலிடும் விதமாக கிராமியப் பட்டிப் பொங்கல் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தெப்பக்குளம் அமைத்து மாடு அதனை உடைத்து காட்டுக்குள் சென்றதும், மாணவ, மாணவிகள் ஒன்றாகக் கூடி நின்று பொங்கலோ! பொங்கல்! பொங்கலோ! பொங்கல்! என்று முழங்கி பொங்கல் வைத்து அதன் படையலை சூரியனுக்குப் படைத்தமை நம் தமிழனின் கலாச்சாரத்தை நம் கண் முன்னே கொண்டு வந்தது. பின்பு மழலையர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி மாட்டு வண்டியில் ஏறி வலம் வந்தமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இப்பொங்கல் விழா தமிழ் மன்றத்தால் நடத்தப்பட்டது. இதனை தமிழாசிரியர்களான முத்துக் குமார் மற்றும் பிருந்தா ஆகிய இருவரும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். எட்டாம் வகுப்பு மாணவன் சதிஷ் நன்றியுரை வழங்க இனிதே பொங்கல் விழா நிறைவுற்றது.
