ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை, கோவை, மதுரை, சேலம், புதுச்சேரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இன்று தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள், மாணவர்கள் பேரணி, உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை வஉசி மைதானத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் இணைந்து பெரியளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டதில், ஸ்பெய்ன், பிலிப்பைன்ஸ், மங்கோலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான ஆர்வலர்கள் பங்கேற்றுள்ளனர். இப்போராட்டம் குறித்து இதில் ஈடுபட்டுள்ள ஸ்பெய்ன் நாட்டை சேர்ந்த மொரிசியோ என்பவர் "சிம்ப்ளி சிட்டி"க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் எனது நண்பர்களுடன் தன்னார்வ தொண்டு நிறுவன பணிக்காக இந்தியா வந்தேன். இங்கு ஜல்லிக்கட்டுக்கு தடை இருப்பதையும், அதற்கு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதையும் அறிந்து கொண்டு இங்கு வந்தேன்.
எங்க ஊர் காளை சண்டை மிகவும் பிரபலம். இருந்த போதும் மக்களை மீறி அங்கு எதுவும் நடக்காது. 5 காளைகளை விளையாட்டின் போது கொலை செய்வார்கள். அங்கு அது பாரம்பரிய விளையாட்டு என்பதால் அந்த விளையாட்டுக்கு தடை விதிக்கப்படவில்லை.
ஆனால், எனக்கு தெரிந்த வரையில், ஜல்லிக்கட்டு என்பது அமைதியான முறையில் காளைகளை தழுவி விளையாடும் விளையாட்டு. இங்கு காளைகள் கொல்லப்படுவதில்லை. அதனால் ஜல்லிக்கட்டு இங்கு கட்டாயம் நடைபெற வேண்டும். இந்த மைதானத்தில் ஜல்லிக்கட்டிற்காக திரண்ட கூட்டத்தை பார்த்து நானும் நண்பர்களும் காளைகள் போல் மிரண்டு போனோம்" இவ்வாறு அவர் கூறினார்.