அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் கோவை மேயராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த அக்கட்சியின் மூத்த நிர்வாகியான மலரவன் அ.தி.மு.க.வில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மலரவன், அதிமுக ஆரம்பித்த காலத்தில் இருந்து அக்கட்சியில் இருந்து வருவதாகவும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்த கட்சி தற்போது மிகவும் மோசமடைந்து இருப்பதாக தெரிவித்தார். ஜெயலலிதா தற்போது இல்லை என்ற தைரியத்தில் சசிகலா குடும்பத்தினர் கட்சியையும், ஜெயலலிதாவையும் நாங்கள் தான் காப்பாற்றினோம் என கூறி வருவதாகவும், சசிகலா குடும்ப ஆதிக்கம் பிடிக்காததால் அ.தி.மு.க.வில் இருந்து விலகி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். கட்சியை ஒரு குடும்பம் காப்பாற்ற முடியாது எனவும், மக்கள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு சசிகலாவிற்கு இல்லை எனவும் கூறிய அவர்,
அ.தி.மு.க.வில் சூடு சொரணையுள்ள உண்மையான தொண்டர்கள் நீடிக்க முடியாது என தெரிவித்தார். ஜெயலலிதா இருந்த போது அ.தி.மு.க.விற்கு இருந்த மக்கள் ஆதரவு தற்போது இல்லை எனவும், சசிகலா கூட்டங்களுக்கு மக்களை பணம் கொடுத்து அழைத்து வருவதாகவும் மலரவன் தெரிவித்தார். அ.தி.மு.க.வில் மூத்த நிர்வாகி சசிகலா குடும்பத்தின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி முதல் நபராக கட்சியில் இருந்து விலகியிருப்பது அ.தி.மு.க தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.