கோவை வஉசி மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டத்தில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களுக்கு கோவை வழக்கறிஞர்களும், பொதுமக்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடும் இளைஞர்கள் மத்தியில் தங்களுடைய ஆதரவினை அளித்து வருகின்றனர். அதேபோல் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்களும் சட்டக் கல்லூரி மாணவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், பெரியவர்கள், சிறியவர்கள் மற்றும் மற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டிற்காக தங்கள் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் முழுவதும் மனித சங்கிலி, பறை இசை மற்றும் பல்வேறு கோஷங்களாலும் ஜல்லிக்கட்டிற்கு தடைகோரும் பீட்டா அமைப்பிற்கும், இதுகுறித்து தற்போது வரை நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுக்கும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், போராட்டத்தில் உள்ளவர்களுக்கு பல்வேறு அமைப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து தண்ணீர், பிஸ்கட் மற்றும் உணவுகள் போன்றவற்றை வழங்கி உதவிகளை செய்து வருகின்றனர்.

இதனிடையே, மாணவர்கள் சிலர் ஒருங்கிணைத்து போராட்டம் நடைபெற்று வரும் மைதானத்தில் ஏற்படும் குப்பைகளை சுத்தம் செய்தும், குப்பை தொட்டி இல்லாததால் அதனை மூட்டைகளில் சேகரித்தும் வருகின்றனர்.
