ஜெயலலிதாவின் சொத்துக்களை கைப்பற்றுவது தீபாவின் நோக்கம் அல்ல எனவும் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட கட்சியை மீட்பது மட்டுமே அவரது நோக்கம் என தீபாவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா விரைவில் புதிய கட்சியை துவங்குவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கோவையில் அனைந்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரிலான புதிய கட்சியின் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுதர்சன் கூறும் போது ஜெயலலிதாவின் சொத்துக்களை கைப்பற்றுவதற்காக தீபா புதிய கட்சியை துவங்கவில்லை எனவும் அதற்கு சட்டரீதியான நடவடிக்கைகளே போதும் எனவும் தெரிவித்தார். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுகவையும் அதன் சின்னமான இரட்டை இலையை மீட்பதுமே புதிய கட்சி துவங்குவதற்கான நோக்கம் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.
கட்சிக்கு வர அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் ஆர்வமாக இருப்பதாகவும் கட்சி துவங்கிய பின்னர் பல மூத்த தலைவர்கள் கட்சியில் இணைவார்கள் எனவும் அவர் அப்போது நம்பிக்கை தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக 4 லட்சம் பேர் இதுவரை புதிய கட்சியில் இணைந்துள்ளதாக கூறிய அவர் தமிழகம் முழுவதும் எவ்வளவு பேர் இணைந்துள்ளனர் என்ற கணக்கை விரைவில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வெளியிட்ட அவர் கோவை மாவட்ட நிர்வாகிகளையும் அறிமுகம் செய்து வைத்தார். அதிமுகவின் தலைமை மையமான பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா வந்ததை அடுத்து முக்கிய நிர்வாகிகள் பலர் அதிருப்தி வெளியிட்டு வரும் நிலையில் எதிர்தரப்பான தீபா தரப்பு உறுப்பினர் சேர்க்கை வரை விரைவாக செயல்படுவது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.