கோவை, வ.உ.சி., மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி இளைஞர்களின் கட்டுக்கடங்காத கூட்டம் தீவிர போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறது.


இந்த போராட்டத்தை கலைக்கும் நோக்கில் காவல் துறை 'ஜாமர்' மூலம் செல்போன் இணைப்புகளை துண்டித்தும், மின்தடை செய்யவும் முடிவெடுத்தாகவும், இதன், மூலம் போராட்டக்கார்களின் மீது தடியடி நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

அதேபோல், இரவு 8 மணி அளவில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வ.உ.சி. மைதானத்திற்கு குவிந்தனர். சம்பவ இடத்திற்கு கோவை மாவட்ட காவல்துறை ஆணையர் அமல்ராஜ் வந்தடைந்தார். போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதை தவிர்ப்பதற்காகவும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யாத வகையிலும் போராட்டங்கள் நடைபெறும் வகையில் அப்பகுதிக்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது.

இரவு நேரங்களிலும் தொடர்ந்த போராட்டத்தில் ஐந்து ஆயிரத்திக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவினை அளித்து வருகின்றனர். இவர்களுக்கு இரவு உணவுகளும் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மூலமாகவும் மைதானத்தில் ஆங்காங்கே உணவுகள் வழங்கப்பட்டது.