கோவை வஉசி மைதானத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் நடைபெறும் தொடர் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் நீடிக்கிறது.

இதில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலமாக ஒரு டன்னுக்கு மேலாக குப்பைகள் இருந்தும் அதனை மூன்று நாளாக அகற்றப்படாமலும் இருந்து வந்தது. கோவை மாநகராட்சி இதற்கான ஏற்பாடுகளையும் செய்யத் தவறியது.


இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைத்து மைதானத்தில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த குப்பைகளை சேகரித்தும் அதனை மூட்டை மூட்டையாக கட்டி மைதானத்தில் ஓரங்களில் வைக்கப்பட்டிருந்தது. இளைஞர்கள் கூட்டம் அதிகரித்தாலும் குப்பை தொட்டி வசதிகள் இல்லாததாலும் மைதானத்தில் குப்பைகள் அதிகம் ஆனது. பின்னர் மாநகராட்சியின் பார்வைக்கு இதனை கொண்டு செல்லப்பட்டு இரவு நேரத்தில் லாரிகள் மூலம் துப்புரவாளர்கள் மூலமாக குப்பைகள் அகற்றப்பட்டது. மூன்று லாரிகள் மூலம் ஒரு டன்னுக்கு மேலாக குப்பைகள் மைதானத்தில் இருந்து அகற்றப்பட்டது.
மேலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் போராட்டம் இங்கு நடைபெறுவதால் கோவை மாநகராட்சி இப்பகுதியில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் எற்படுத்தியும் அதனை துப்புரவாளர்கள் மூலமாக அகற்றவும் கோரிக்கை வைத்தனர்.