கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 77 மற்றும் 78- வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம், நஞ்சப்பா கார்டன் பகுதிகளில் கோவை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி மாநகராட்சி பணிகள் குறித்து ஆய்வில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி மக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்து அதுகுறித்து உடனடி நடவடிக்க மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின், அதேப் பகுதியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதையும், 77-வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம், சண்முகராஜாபுரம் பகுதியில் மீட்கப்பட்ட மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடத்தையும் மாநகராட்சி துணை ஆணையர் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதியுடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, உதவி நகரமைப்பு அலுவலர் சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.