தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து கடம்பின் எனும் மருத்துவ குணமுள்ள உயிர்வேதிப்பொருளை பிரித்தெடுக்கும் புதிய முறைக்கு இந்திய அரசின் காப்புரிமை அலுவலகத்திடமிருந்து அதிகாரப்பூர்வ காப்புரிமை பெற்றுள்ளனர். இந்த முறை 93-94% திறனுடன் கடம்பினை பிரித்தெடுக்க உதவுகிறது.


Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணம் வாய்ந்த உயிர்வேதிப்பொருளை பிரித்தெடுக்கும் புதிய முறையை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்களுக்கு இந்திய அரசின் காப்புரிமை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக காப்புரிமையை வழங்கியுள்ளது.

"நியோலாமார்க்கியா கடம்பாவிலிருந்து (Neolamarckia cadamba) அதிக அளவு கடம்பினை (Cadambine) ஈட்டுவதற்கு, பிரித்தெடுப்பதற்கு, மற்றும் அளவிடுவதற்குமான புதிய முறை" என்ற தலைப்பிலான இந்த கண்டுபிடிப்பை கோபால் மா. ரா., முனைவர் ந. செந்தில், முனைவர் ச. வெள்ளைக்குமார் மற்றும் முனைவர் அ. பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய ஆராய்ச்சிக் குழு உருவாக்கியுள்ளது.

தமிழ்ச் சங்க இலக்கியமான அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் பழமையான கடம்ப மரமானது (நியோலாமார்க்கியா கடம்பா), வலி நிவாரணி, அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளுக்காக பாரம்பரிய மருத்துவத்தில் மிகவும் மதிக்கப்படுகிறது. பாரம்பரியமாக, இந்த மரத்தின் மரப்பட்டை காய்ச்சல் மற்றும் தோல் நோய்களைப் போக்கவும், இலைகள் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்குக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பழம் இயற்கையான ஆக்ஸிஜனேற்றியாகவும் (antioxidant) வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.

புதிதாகக் காப்புரிமை பெற்ற இந்த முறையானது, இந்த சிகிச்சை பண்புகள் பலவற்றிற்கும் காரணமான கடம்ப மரத்தில் உள்ள கடம்பினைப் பிரித்தெடுக்கவும் அளவிடவும் உதவுகிறது. இந்த நெறிப்படுத்தப்பட்ட செயல்முறையானது வெப்பச் சிதைவைத் தடுப்பதற்காக மரப்பட்டை திசுக்களை உறைதல்-உலர்த்துதல் (freeze-drying) முறையை பயன்படுத்துகிறது. அதனைத் தொடர்ந்து ஈர்பொருள் பயன்பாட்டின் மூலம் அசுத்தங்கள் சுத்தீகரிக்கப்படுகின்றன.

இறுதியான துல்லியமான அளவீட்டிற்கு, TNAU-வில் உள்ள உயிரித் தொழில்நுட்ப சிறப்பு மையத்தில் (COXBIT) உள்ள அதி நவீன திரவ நிறமூர்த்த (UHPLC-MS/MS) இயந்திர வசதி பயன்படுத்தப்பட்டது. இந்த முறையின் மூலம் 93% முதல் 94% வரை கடம்பினை பிரித்தெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மைல்கல்லைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தர் முனைவர் கா. சுப்பிரமணியன் கலந்துக் கொண்டு ஆராய்ச்சிக் குழுவிற்கு காப்புரிமைச் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்வில் முதுகலை படிப்புகள் துறையின் முதன்மையர் ச. பாபு, ஆராய்ச்சிக்குழுவைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர் மா. ரா. கோபால், தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரித்தொழில்நுட்பத் துறையின் இயக்குனர் முனைவர் ந. செந்தில், தாவர உயிரித்தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ச. வெள்ளைக்குமார் மற்றும் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் முனைவர் அ. பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்த காப்புரிமை பெற்ற முறை, பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கடம்ப மரத்தின் மருத்துவ குணங்களை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கவும், மருந்து உற்பத்தியில் பயன்படுத்தவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...