ஜும்கார் என்ற நிறுவனம் புதுமையான திட்டத்தில் வாடகை கார் சேவையினை கோவையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் வாடகைக்கு கார் எடுக்கும்பொழுது மற்ற நிறுவனங்களில் காருடன் ஓட்டுநரையும் அனுப்புவதைப்போல் அல்லாமல் ஒரு சில நிபந்தனைகளுடன் தனி நபரே காரினை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம்.

இத்தியா முழுக்க இந்நிறுவனம் 2600 கார்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அந்நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி க்ரேக் மொரன் கூறுகையில், கோவையில் எங்கள் சேவையினை அறிமுகம் செய்வதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இந்த சேவையின் மூலம் நகர மக்களின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ற முறையில் வாடகைக்கு கார் சேவையினை வழங்க உள்ளோம்.

இது கார் சொந்தமாக வைத்திருப்பதற்கு இது ஒரு மாற்றாக இருக்கும். இது மக்களின் தனிப்பட்ட பயணத் தேவைகள் குறித்தான ஒரு புதிய பார்வையை உருவாக்கும். இந்த சேவையினை அறிமுகம் செய்வதன் மூலம் தொழில்நுட்பம் எப்படி நமது நகரங்களை மாற்றும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. நாம் தற்பொழுது இந்த நாட்டில் அடிப்படையான ஒரு மாற்றத்தை நோக்கி பயணித்து வருகிறோம்' என்றார்.
மேலும் ஜும்கார் வீட்டிற்கே காரை அனுப்பும் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளரின் இடத்திற்கே காரினை கொண்டுவந்து சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.