கோவை வாளையாறு அருகே விரைவு ரயில் மோதிய விபத்தில் ஒரு பெண் யானை அதே விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு பெண் யானை, நடுப்பதி அருகே உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டதால், இறப்பின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
கோவை: கடந்த 14 ஆம் தேதி, தமிழக – கேரளா எல்லையான வாளையாறு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானை கூட்டத்தின் மீது கன்னியாக்குமரி – அசாம் விரைவு ரயில் மோதிய விபத்தில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்தது.
மேலும் சில யானைகள் காயமடைத்திருக்கலாம் என ரயில் ஓட்டுநர் கூறிய நிலையில், கேரள வனத்துறையினர் காயமடைந்த யானைகளை கண்டறியும் பணிகளை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், வாளையாறு அருகே விபத்து நடந்த சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நடுப்பதி என்ற வனப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வனத்துறைனர் அங்கு சென்று பார்த்த போது யானையின் கால்களில் பலத்த காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ரயில் மோதியதில், காயமடைந்த யானை சிறிது தூரம் வந்து உயிரிழந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அதே பகுதியில் இறந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, அதே பகுதியில் யானை அடக்கம் செய்யப்பட்டது.
ரயில் மோதிய சம்பவத்தில், மேலும் ஒரு குட்டி யானைக்கு அடிபட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், அந்த யானையை கண்டறிந்து சிகிச்சை அளிக்க, கேரள வனத்துறையினர் தீவிரத் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, விபத்து நடந்த பகுதி தமிழக - கேரள எல்லையில் இருப்பதால், அடிப்பட்ட அந்த குட்டி யானை தமிழக எல்லைக்குள் வந்திருக்கலாம் என்பதால், தமிழக வனத்துறையினரும் அந்த யானையை தீவிரமாக தேடி வருகின்றனர்.