சூயஸ் குடிநீர் குழாய் அமைப்பதற்காக பொது குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படுவதால், சூயஸ் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய பரிந்துரைக்க வலியுறுத்தி சமூக நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம் மனு.
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த குடிநீர் விநியோகம் சூயஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் இதனை ரத்து செய்யக்கோரி சமூக நீதி கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
அவரது மனுவில், கோவை மாநகராட்சியின் 78 மற்றும் 79 ஆகிய வார்டு பகுதிகளில் சூயஸ் குடிநீர் குழாய் அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாய் இணைப்புகளை மாநகராட்சி நிர்வாகம் துண்டித்து வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
இதன் காரணமாக குடிநீர் விநியோக ஒப்பந்த உரிமையை தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதை ரத்து செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனு அளிக்க வந்தவர் மாதிரி குடிநீர் குழாய் மற்றும் கண்டன பதாகைகளை கையில் ஏந்தியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனது கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.