கோவை மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள், குடிநீர் விநியோகப் பணிகள், மற்றும் சீர்மிகு நகரத்திட்ட பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் ஆய்வு.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.69க்குட்பட்ட மேட்டுப்பாளையம் சாலை, அவிநாசிலிங்கம் கல்லூரி அருகில் பாரதிபார்க் இரண்டாவது வீதி பகுதிகளில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளா் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப் பணியாளாகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள குடிநீர் நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பாரதிபார்க் பகுதியில் உணவு கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகளிலிருந்து பயோகேஸ் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, மத்திய மண்டலம், ரேஸ்கோர்ஸ் பகுதியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மாதிரி சாலையின் ஒரு பகுதியாக மிதிவண்டி பாதை, தாமஸ்பார்க் சந்திப்பில் மீடியா டவர் (Media Tower) அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை மாவட்ட ஆட்சி தலைவர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து பணிகளை தரமாகவும், துரிதமாகவும் செய்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
தொடர்ந்து வாலாங்குளத்தில் ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சீர்மிகு நகரத் திட்ட பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் வாலாங்குளத்தின் கரையோர பகுதிகளில் பயனுள்ள மரக்கன்றுகளை நட்டு பராமரித்திடவும், மேலும், வடகரை பகுதியில் கட்டப்பட்டு வரும் உணவுக்கூடம், திறந்தவெளி கூட்டரங்கம் ஆகிய கட்டுமான பணிகளை தரமாகவும், துரிதமாகவும் செய்து முடிக்க சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வுகளின் போது, மாமன்ற உறுப்பினர் சரவணக்குமார், ஸ்மார்ட் சிட்டி பொது மேலாளர் பாஸ்கர், உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ், உதவி செயற்பொறியாளர்கள் புவனேஸ்வரி, சுகந்தி, உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, உதவி பொறியாளர் கமலக்கண்ணன், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.