பெருமாநல்லூர் அடுத்த போயம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த பழைய பொருட்கள் குடோனில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையான நிலையில், விளக்கு அல்லது பட்டாசால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த போயம்பாளையம் பகுதியில் இரும்புக்கடை நடத்தி வருபவர் ஶ்ரீ ராம். மேலும் அதே பகுதியில் இவருக்கு சொந்தமாக பழைய பொருட்களை சேமித்து வைக்கும் குடோன் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு ஏழு மணியளவில், அந்த குடோனிலிருந்து புகை வந்துள்ளது. பின்பு திடீரென தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக அருகிலிருந்தவர்கள் திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் மற்றும் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 2 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து குறித்து குடோன் உரிமையாளர் கூறியதாவது, குடோனை இரவு நேரம் பயன்படுத்தாத காரணத்தால் குடோனில் மின் இணைப்பு இல்லை. நேற்று கார்த்திகை தீபம் என்பதால் அருகிலுள்ள வீடுகளிலிருந்து விளக்கோ அல்லது பட்டாசோ விழுந்து தீப்பிடித்திருக்கலாம்.
இந்த தீ விபத்தின் காரணமாக குடோனில் இருந்த கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்து உள்ளன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.