சூலூர் அடுத்த சின்னப்புத்தூர் கிராமத்தில் பேருந்து நிறுத்தாமல் ஓட்டுனர்கள் அலட்சியமாக செயல்படுவதால் பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்படுவதாக கூறி பொதுமக்கள், மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்.
கோவை: கோவை மாவட்டம் சூலூரை அடுத்த செஞ்சேரிப்புதூர் அருகே உள்ளது சின்னப்புத்தூர் கிராமம். பல்லடம் - உடுமலை பிரதான சாலையில் உள்ள இந்த கிராமத்தில் இருந்து ஏராளமான பள்ளி மாணவர்கள் கேத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
அதேபோல், ஏராளமான தொழிலாளர்கள் பல்லடம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்காக சென்று வருகின்றனர். இந்நிலையில் பல்லடம் முதல் உடுமலை செல்லும் பேருந்துகள் சின்னப்புத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதில்லை என்று தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
பேருந்துகள் சரிவர நிற்காததால் பொதுமக்கள் சந்தித்து வரும் இன்னல்களை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாராக கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும் இந்த பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இன்று காலை பல்லடம் உடுமலை சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது, பேருந்து பிரச்சனையால் சரியான நேரத்துக்கு பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் சிரமம் அடைந்து வருவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இந்நிலையில், சாலை மறியல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுல்தான்பேட்டை காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், புகார் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று உறுதியளித்த பின் போராட்டம் கைவிடப்பட்டது.
சுமார் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பல்லடம் - உடுமலை சாலையில் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டது.