திருப்பூரில் பேட்டியளித்த எம்.பி சுப்பராயன், ஆர்.எஸ்.எஸ் ஊழியர் போல் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி டிசம்பர் 29 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றார்.
திருப்பூர்: திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில் திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக கடந்த 8 ஆண்டு காலமாக திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது.
இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக இருக்கக்கூடிய பின்னலாடை உற்பத்தியினை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாற்றக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முயற்சியை கைவிட்டு மத்திய அரசு பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக இந்தியாவில் உள்ள 23 பஞ்சாலைகள் மூலம் நூல் உற்பத்தி செய்யப்பட்டு அதனை அரசே கொள்முதல் செய்து உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்துவதன் மூலம் பஞ்சாலைகளில் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுவதோடு, மத்திய அரசுக்கு வருமானம் கிடைக்கும்.
மேலும், உள்நாட்டு உற்பத்திக்கான நூல் விலையில் மாற்றம் இல்லாமல் உரிய விலையில் கிடைப்பதற்கான நடவடிக்கையாக இருக்கும். தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பருத்தி விளைச்சலை ஊக்கப்படுத்த மத்திய, மாநில அரசுகள் சலுகைகள் மற்றும் மானியங்களை அறிவிக்க வேண்டும்.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட வேலை வாய்ப்பு அளிக்கக் கூடிய தொழில் நகரங்களில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு முழுமையான ஜிஎஸ்டி வரி விலக்கு வழங்க வேண்டும். இதுகுறித்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வலியுறுத்த உள்ளேன். மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஒதுக்கப்படும் மத்திய அரசு நிதியிலும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படுகிறது.
பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அந்நிய செலாவணியை ஈட்டித் தரக்கூடிய திருப்பூர் மாவட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு திருப்பூர் மூலம் பெறும் வருவாயில் சில சதவீதத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். சிறப்பு தகுதியின் அடிப்படையில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.
மேலும் தமிழக ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் போல் செயல்பட்டு வருகிறார். அரசியலமைப்பு சட்டத்தின்படி வாழ வேண்டும் என்பதை கூறாமல் சனாதன தர்மத்தின் படி வாழ வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார்.
அவர் தனது பொறுப்புணர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது மத்திய அரசு அவரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வரும் 29ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.