கிணத்துக்கடவு அடுத்த பொட்டையாண்டிபுரம்பு பகுதியில் செயல்படும் கல்குவாரியால் ஏற்கனவே வீடுகள் சேதமடைந்த நிலையில் மீண்டும் கல்குவாரி செல்படுவதற்கு தடை விதிக்க கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பொட்டையாண்டிபுரம்பு பகுதியில் ரஞ்சித் குமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு இந்த கல்குவாரியில் பாறையை உடைக்க வைத்த வெடியால் அருகில் உள்ள வீடுகளுக்குள் கற்கள் விழுந்து வீடுகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கல்குவாரியை இயக்கக் கூடாது என்று வருவாய்த் துறையினர் உத்தரவிட்டனர். இந்த நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு கல்குவாரியை இயக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் கல்குவாரி இயக்கப்பட்டால் விளை நிலங்களும் வீடுகள் சேதமடையும் எனக் கூறியுள்ள பொதுமக்கள், கல்குவாரியின் அனுமதியை ரத்து செய்யக்கோரி, கல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தையடுத்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.