விஸ்கோஸ் பஞ்சின் உத்தேசிக்கப்பட்டுள்ள அபரிமிதமான குவிப்பு வரியால், நூற்பாலைகள் கடுமையாக பாதிக்கும் என்பதை கருத்திக் கொண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குவிப்பு வரியை ரத்து செய்ய தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வலியுறுத்தல்.
கோவை: விஸ்கோஸ் பஞ்சின் மீது உத்தேசிக்கப்பட்டுள்ள அபரிமிதமான குவிப்பு வரியை நிராகரிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமனுக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்திய ஜவுளித் தொழிலின் எதிர்கால வளர்ச்சி இயந்திரமான செயற்கை இழை பஞ்சினால் உருவாக்கப்படும் ஜவுளிப் பொருட்களை வளர்ச்சி அடைய வைக்கும் நோக்கில், அதன் கட்டமைப்பு சிக்கல்களை நீக்க மாண்புமிகு பாரத பிரதமர் மூலப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறிப்பாக PTA, MEG, acrylic fibre, viscose staple fibre ஆகியவற்றின் மீது குவிப்பு வரியை நீக்கி நடவடிக்கை எடுத்தார்.
இருப்பினும், செயற்கை பஞ்சு உற்பத்தியாளர்கள் சங்கங்களின் பரிந்துரையின் பேரில் CESTAT அமைப்பு DGTR எனப்படும் வர்த்தக தீர்வுகளுக்கான இயக்குனரகத்திடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க கூறியதன் பேரில், இந்தோனேசியா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கோஸ் செயற்கை பஞ்சு மீது கிலோ ஒன்றுக்கு 0.512 அமெரிக்க டாலர் குவிப்பு வரியை விதிக்க DGTR பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர், ரவி சாம், DGTR பரிந்துரையை நிராகரித்து, சிறு, நடுத்தர, குறு நூற்பாலைகளையும், விசைத்தறி, கைத்தறி, பின்னலாடை துறைகளை மத்திய நிதித்துறை அமைச்சர் காப்பாற்ற வேண்டும்.
மேற்படி உத்தேச குவிப்பு வரியானது உள்நாட்டு விஸ்கோஸ் செயற்கை பஞ்சு உற்பத்தியாளருக்கு 28 சதவீத பாதுகாப்பை அளிக்கிறது. இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்கள், இயந்திரங்கள் போன்றவற்றுக்கு பெரும்பாலானவை 5 முதல் 7.5 சதவீத அடிப்படை இறக்குமதி வரியே விதிக்கப்படும் நிலையில், விஸ்கோஸ் செயற்கை பஞ்சுக்கு 28 சதவீத குவிப்பு வரி விதிப்பது நியாயமற்றது.
இது ஒட்டு மொத்த விஸ்கோஸ் செயற்கை பஞ்சு ஜவுளி சங்கிலியை பெரிதும் பாதிக்கும். மதிப்பு கூட்டப்பட்ட ஏற்றுமதிக்காக தமிழகத்தில் செயல்படும் இரண்டு லட்சத்திற்கும் மேலான விசைத்தறிகள் ஏற்கனவே விஸ்கோஸ் செயற்கை பஞ்சு மூலம் துணி உற்பத்தி செய்ய துவங்கி விட்டன.
இந்நிலையில், மேற்படி உத்தேச குவிப்பு வரியானது துணி உற்பத்தியாளர்களை மீண்டும் விஸ்கோஸ் நூல் இறக்குமதிக்கு மாறச் செய்யும். இதனால் சிறு, நடுத்தர, குறு நூற்பாலைகள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். பெரும்பாலான நூற்பாலைகள் பருத்தியுடன் 10 முதல் 15 சதவீதம் வரை விஸ்கோஸ் பஞ்சை கலந்து தங்களை வர்த்தக போட்டியில் தக்க வைத்துக் கொண்டுள்ள நிலையில், உத்தேச குவிப்பு வரி இந்த நூற்பாலைகள பெரிதும் பாதிக்கும்
உள்நாட்டு விஸ்கோஸ் செயற்கை பஞ்சு உற்பத்தியாளர் நமது நாட்டில் வளர்ந்து வரும் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யும் நிலையில் அவர்கள் இல்லை. மேலும், விநியோகத்தை பங்கீடு செய்வது என்பது இந்த துறையின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும். உள்நாட்டு செயற்கை பஞ்சு உற்பத்தியாளர் 300க்கும் குறைவான நூற்பாலைகளுக்கு மட்டுமே பஞ்சை வழங்குகின்றனர்.
நாட்டில் சுமார் 4000 நூற்பாலைகள் உள்ளன.நாட்டிலுள்ள எந்தவொரு நூற்பாலையும் செயற்கை பஞ்சை சர்வதேச விலையில் கிடைக்கப் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். விஸ்கோஸ் செயற்கை பஞ்சு மீது குவிப்பு வரி நீக்கப்பட்ட பிறகு எந்த ஒரு நூற்பாலையோ அல்லது ஓபன் எண்ட் நூற்பாலையோ தங்களது தேவைக்கேற்ப சர்வதேச விலையில் வாங்க முடியும் என்ற நிலை உருவாகியதோடு, கைத்தறி மற்றும் விசைத்தறி துறையினர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிந்தது.
மீண்டும் குவிப்பு வரி விதிக்கப்பட்டால், இந்த மூலப் பொருள் கிடைப்பது பற்றாக்குறை ஏற்பட்டு, தொழில் துறையில் அமைதியின்மையை ஏற்படுத்தும். இதன் பின்னணியில், வர்த்தக தீர்வுகளுக்கான இயக்குனரகம் பரிந்துரைத்த அபரிமிதமான உத்தேச குவிப்பு வரியை மத்திய நிதியமைச்சர் நிராகரிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.