கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில், சாலை விதிகளை கடைபிடித்து சிக்னலில் நின்று செல்லும் வாகனங்களில் பயணித்த வாகன ஓட்டிகளுக்கு மாநகர காவல்துறையினர், ரோஜா பூ கொடுத்து பாராட்டி ஊக்குவித்தனர்.
கோவை: சாலை விபத்துகள் நடக்க வெவ்வேறு காரணங்கள் இருந்தாலும், போக்குவரத்து விதிகளை கடைபிடித்தாலே சாலை விபத்துகளை பெருமளவு குறைக்க முடியும் என்று பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அவசரம் கருதி போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் சிக்னல்களை கடப்பது, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்குவது போன்ற விதிமீறல்களால் நாம் கட்ட வேண்டிய அபராதம் சில நேரங்களில் விலை மதிப்பற்ற நமது உயிராக கூட இருக்கலாம்.
பயண அவசரத்துக்கு ஏற்றாற்போல் சிக்னல்களை பின்பற்றுவது மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்து காவலர்கள் பணியில் இல்லாததை பயன்படுத்தி அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குவது ஒரு புறம் நடைபெற்று வருகிறது.
ஆனால், மறுபுறம் போக்குவரத்து காவலர்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், இரவு - பகல் என்ற அனைத்து நேரங்களிலும் நிதானத்துடன் போக்குவரத்து விதிகளை குறிப்பாக சிக்னல்களை பின்பற்றுபவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு முயற்சியை கோவை காவல் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
கோவையில் வழக்கமாக பத்து மணிக்கு சிக்னல்கள் ஓபன் செய்யப்படும். இந்த நேரத்தில், வாகனங்கள் தானாகவே சுதாரித்து சென்று வருவது வழக்கம். இந்த நிலையில், நேற்று இரவு லட்சுமி மில் சிக்னலில் நள்ளிரவு 12 மணி வரை மஞ்சள், சிவப்பு, பச்சை சிக்னல்கள் வேண்டுமென்றே ஒளிர விடப்பட்டன.
இரவு நேரங்களில், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க இவ்வாறான முயற்சியில் ஈடுபட்ட போலீசார், எதிர்புறம் எந்த வாகனமும் வராத நிலையில், வாகன ஓட்டிகள் சிக்னலை மதித்து நின்று போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனங்களை இயக்கி சென்றனர்.
இவ்வாறு சிக்னல் மாறும் வரை நின்ற வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக மாநகர போக்குவரத்து போலீசார் ரோஜா பூ கொடுத்து ஊக்குவித்து பாராட்டினர். அவர்களிடம் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்த காவலர்கள் விதி மீறல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
இரவு 12 மணிக்கு போக்குவரத்து காவலர்கள் கண்காணிப்பில் உள்ளதை சற்றும் எதிர்பாராத வாகன ஓட்டிகள், தங்களை ஊக்குவித்த காவல்துறையினரின் செயலை வெகுவாக பாராட்டினர்.