கூடலூர் நகரில் கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரியின் டயர் வெடித்த விபத்தில், லாரியில் தீப்பற்றிய நிலையில், தீயணைப்பு துறையினர் விரைந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால், பெரும் விபத்து தவிர்ப்பு.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கேஸ் விநியோகம் செய்வதற்காக இன்று காலை ஒரு லாரியில் நூற்றுக்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி கூடலூர் நகரில் ராஜகோபாலபுரம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென பின்பக்க டயர் வெடித்தது. இதனால் டயரில் தீ பற்றி எரியத் தொடங்கியது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த லாரி ஓட்டுநர், லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி, கூடலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக லாரியின் பின்பக்க டயரில் பற்றிய தீயை தண்ணீரை பீச்சி அடித்து உடனடியாக அணைத்தனர்.
மேலும் லாரியில் இருந்த சிலிண்டர்களின் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர். ஓட்டுனரின் சாதுர்யமான செயலாலும், விரைந்து வந்த தீயணைப்பு துறையினராலும் கூடலூரில் இன்று பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.