திருப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பின் பேசிய அமைச்சர் சாமிநாதன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக முன்மொழிந்தால், நான் வழிமொழிவேன் என்று கூறினார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சின்னையா கார்டன் பகுதியில் 90 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பூங்கா அமைக்கப்பட்டது.
அதேபோல், பல்லடம் அரசு மருத்துவமனையில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் வருபவர்கள் தங்குவதற்கு கட்டிடம் ரூபாய் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த 2 கட்டிடங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில், தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது, பல்லடம் நகராட்சியில் தற்பொழுது மக்கள் தொகை அதிகரித்து வருவதால் புதிதாக இரண்டு நகர்ப்புற மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மக்களை தேடி மருத்துவம் ஆகியவை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒரு கோடி மக்கள் பயனடைந்த நிலையில் ஒரு கோடியே ஒன்றாவது நபருக்கு தமிழக முதல்வர் மருந்து பெட்டகத்தை வழங்கியுள்ளார்.
சாலையில் செல்லும் பொழுது வாகனத்தில் விபத்து ஏற்பட்டால் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் அனுமதித்து முதல் 48 மணி நேரத்திற்கு தமிழக அரசு சிகிச்சைக்கான முழு செலவை ஏற்று கொள்ளும்.
சர்க்கரை நோய் என்பது சாதாரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ளது அதிலிருந்து அவர்களை காக்கும் பொருட்டு மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்பட்டு வருகிறது.
அழகுமலை ஜல்லிக்கட்டுக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய முடிவு எடுக்கும். தனியார் இடத்தில் அவர்களின் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதுப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறாக பதிவு செய்பவர்கள் மீது மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக முன்மொழிந்தால் அதை நான் வழிமொழிகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், பல்லடம் நகர செயலாளர் ராஜேந்திர குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.