நீலகிரி கூடலூர் நகர பகுதியில் புகுந்த காட்டு யானை, கோழி ஏற்றி வந்த வாகனத்தை மறித்து தாக்க முயன்ற நிலையில், அச்சத்தில் ஓட்டுனரும் உதவியாளரும் அலறியடித்து ஓடிய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் இருந்து வெளியில் வரும் காட்டு யானைகள் உணவு தேடிகிராம பகுதிகள் மற்றும் கூடலூர் நகர பகுதிக்கு வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் புத்தாண்டு நாளான இன்று அதிகாலை காட்டு யானை ஒன்று திடீரென நகருக்குள் வந்துள்ளது. செம்பாலா பகுதிக்கு வந்த அந்த யானை திடீரென முக்கிய சாலையில் நடந்து வந்ததை கண்டு பொதுமக்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவ்வழியே கோழிகளை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் ஒன்று வந்துள்ளது. இதனை கண்ட காட்டு யானையை வாகனத்தை மறித்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால், அச்சமடைந்த வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர், வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். பின்பு வேகமாக வந்த யானை அந்த வாகனத்தை இடித்து தள்ளிவிட்டு தொடர்ந்து நடந்து சென்றது.
யானை வாகனத்தை தாக்கும் காட்சிகள் அங்கிருந்து ஒரு வணிக நிறுவனத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்பொழுது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.