கோவையில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
கோவை: கோவையின் புகழ்பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த 28ஆம் தேதி காப்பு கட்டலுடன் துவங்கியது.
பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் முதல் 9 நாட்களும் காலையும் மாலையும் திருவெம்பாவை உற்சவம், மாணிக்கவாசகர் திருவீதி உலா நடந்தது. ஒன்பதாவது நாளான நேற்று இரவு கிளி வாகன சேவை, அன்னூஞ்சல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மார்கழி பூஜை செய்யப்பட்டது, தொடர்ந்து 4:15 மணிக்கு நடராஜப் பெருமானுக்கு 30 வகையான மங்கள திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 8 மணிக்கு ஆருத்ரா தரிசன காட்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதனை ஒட்டி ஏராளமான பக்தர்கள் பேரூரில் குவிந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் குவிந்துள்ளதால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.