கோவை அருகே தாமரைக்குளம் பகுதியில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி, சாலை தடுப்பில் மோதி ஜவுளி கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான நிலையில், படுகாயமடைந்த ஓட்டுநர் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்டு மருத்துவமனையில் அனுமதி.
கோவை: கோவை மாவட்டம் தாமரை குளம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். டிப்பர் லாரி உரிமையாளரான இவர், ஓட்டுநராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், பொள்ளாச்சியில் கட்டுமான பொருட்களை இறக்கிவிட்டு லாரியை கோவை நோக்கி ஓட்டி வந்துள்ளார்.
அப்போது, தாமரைக்குளம் அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, திடீரென சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதியதுடன், அருகே இருந்த ஜவுளி கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
அதிகாலை நேரம் என்பதால், ஜவுளி கடைக்குள் ஊழியர்கள் யாரும் இல்லாததால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதனிடையே விபத்துக்குள்ளான லாரியை கிரேன் மூலம் கடைக்குள் இருந்து வெளியே எடுக்க முயன்றனர்.
இதனிடையே விபத்துக்குள்ளான லாரியில் சிக்கிய மணிமாறன் உடலில் வலது பக்கத்தில் பலத்த காயமடைந்துள்ளார். இந்நிலையில், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரை மீட்ட பொதுமக்கள், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.