திருப்பூரில் தமிழர் பேரவையின் சார்பில் நடைபெற்ற 31 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழாவில் 150க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ பெண்கள் சாதி மதத்தை கடந்து சமத்துவ பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.
திருப்பூர்: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் தமிழர் பேரவை சார்பில் 31 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.
இதில் சாதி மதத்தை கடந்து இஸ்லாமிய, கிறிஸ்தவ பெண்கள் ஒரே இடத்தில் 150 பொங்கல் பானைகளில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.
இந்த விழாவில் தமிழர்களின் பாரம்பரியமான தப்பாட்டம் முழங்க ஆண்களும் பெண்களும் கலாச்சார புத்தாடைகள் அணிந்து பொங்கல் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் பொங்கல் பானையில் பொங்கல் பொங்கி வரும் பொழுது குலவை சப்தமிட்டு பொங்கலோ பொங்கல் என்று முழக்கமிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்ரமணியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.