தமிழகத்தில் தற்போது நிலவி வரும் நிலையில்லாத அரசியல் சூழல் காரணமாக பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இதனிடையே இந்த சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்த சிலர் முயல்வதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் குற்றப்பின்னணி உடைய நபர்கள், ரவுடிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், அன்னூர், பொள்ளாச்சி, வால்பாறை, பெரியநாயக்கன்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் 63 பேரும், மாநகர பகுதியை சேர்ந்த ஒருவரையும் என மொத்தம் 64 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பலர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், சிலர் மீது குற்றப்பின்னணி உள்ளதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், காவல்துறையினரின் இந்த அதிரடி சோதனை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.