கோவை சோமனூர் சாலையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், படுகாயமடைந்த, பள்ளிக்குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி- கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், மல்லிகா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
சோமனூர் சாலையை கடக்க முயன்றபோது, கல்லூரி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனம், இவர்களின் வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில், மல்லிகாவுடன் பயணித்த இரண்டு குழந்தைகளும், இரு சக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனிடையே இருசக்கர வாகனங்கள் மோதும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில், மல்லிகா தனது இரண்டு குழந்தைகளுடன் சாலையை கடக்க முயல்வதும், கல்லூரி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக நேருக்கு நேராக மோதி, அனைவரும் தூக்கி வீசப்பட் காட்சிகள் பதிவாகியுள்ளது .
சினிமா சண்டைக்காட்சிகளைப் போன்று அரங்கேறியுள்ள இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.