திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிணற்றுப்பாசனம் மூலம் வெண்டைக் காய் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம்காட்டத் தொடங்கியுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் பகுதியில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. நிறைந்த வருமானம் ,சொட்டுநீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சல், மதிப்புக் கூட்டுப்பொருளாக மாற்றுவது போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஆர்வம் காட்டி வந்தனர்.
ஆனால், தென்னை சாகுபடி ஆண்டு பயிர் என்பதால் வறட்சியான காலங்களில் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் கிணற்று நீரை பயன்படுத்தி குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர்.
ஆண்டு முழுவதும் குடிமங்கலம் பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலம் தக்காளி, மிளகாய், வெண்டை ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றில், சந்தையில் அதிக அளவு விற்பனை ஆகும் பயிராக வெண்டைக்காய் அண்மைக்காலமாக இருந்துவருகிறது.
மேலும், சாம்பார், பொரியல், புளிக்குழம்பு உள்ளிட்ட சைவ உணவுகளில் வெண்டைக்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இவற்றின் தேவை அதிகமாக உள்ளது. சமீப காலமாக சர்க்கரை நோயாளிகள் இந்த வெண்டைக்காயை அதிக அளவு பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். எனவே, இந்தப் பகுதி விவசாயிகள் தற்போது வெண்டைக்காயை தனிப்பயிராக பயிரிட்டு விற்பனையில் அதிக வருமானம் ஈட்டி அசத்திவருகின்றனர்.
வெண்டைக்காயை பொருத்தவரை வரத்து குறைவால் கிலோ ரூ. 40 முதல்50 ரூபாய் என விலை விற்பனையாகிறது. அதுமட்டுமின்றி, மொத்த வியாபாரிகள் இவற்றை வாங்கி, கோவை மதுரை சேலம் மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் கொண்டு செல்வதால் விற்பனை வாய்ப்பு அதிகரித்து, வருவாயும் கூடியுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.