கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் கட்டாய கல்வி உரிமை சட்டம் 25 சதவீதம் இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கப்பட்ட மாணவர்களிடம் கட்டணம் செலுத்த சொல்லி பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியதை கண்டித்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டம்.
கோவை: கோவைமாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளியில் அரசு இடஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடியை கண்டித்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி - கோவை சாலையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் பள்ளியில் தமிழக அரசின் RTE ( Right to education) எனப்படும் 25 சதவிகித இலவச கல்வி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 15 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
தற்போது ஓராண்டு கழித்து தேர்வு செய்யப்பட்ட 15 குழந்தைகளில் ஐந்து குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்று கூறி பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோர்களிடம் கல்வி கட்டணம் செலுத்த வலியுறுத்தியுள்ளது.
இல்லை என்றால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் இருவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் பள்ளி நிர்வாகம் தங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனவும் இதுவரை மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து எந்த ஒரு ஒப்புதல் கடிதமும் வரவில்லை என்று பெற்றோர்களிடம் தெரிவித்ததாக தெரிகிறது.
இதையடுத்து பெற்றோர்கள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் கேட்டபோது இது சம்பந்தமாக ஏற்கனவே பள்ளி நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளதாகவும் கண்டுகொள்ளாமல் இருந்தது அவர்கள் தவறு தான் என்று காரணம் சொன்னதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இப்படி பள்ளி நிர்வாகமும் மாவட்ட கல்வி அதிகாரிகளும் காரணம் கூறி எங்கள் பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறி ஆக்கிவிட்டதாக வேதனை தெரிவித்ததோடு பிள்ளைகளின் படிப்பு தொடர அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும் இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.