கோவை வீரபாண்டி அருகே உறவுக்கார பெண்ணான மருத்துவ மாணவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட பெண் ஐ.டி. ஊழியர் கௌசல்யா, நண்பர் பாலகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: கோவை வீரபாண்டி அருகே மருத்துவ மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்த பெண் ஐ.டி. ஊழியர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் கௌசல்யா என்றஐ.டி துறையில் பணியாற்றி வருகிறார். இவரது உறவுக்கார பெண் ஒருவர் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக உறவுக்கார பெண்ணை பழிவாங்கஐ.டி ஊழியர் கௌசல்யா திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து, உறவுக்கார பெண்ணின் நண்பரான தொண்டாமுத்தரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
பாலகிருஷ்ணன் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை எடுத்து கௌசல்யாவிற்கு சமூக வலைதளம் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அந்த புகைப்படத்தை பெற்றுக் கொண்ட கௌசல்யா அதனை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த ஆபாச புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உறவினர்களுடன் இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஐ.டி.ஊழியர் கௌசல்யா மற்றும் உறவுக்கார பெண்ணின் நண்பர் பாலகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.
கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட தகராறில் பெண்ணின் படத்தை உறவுக்கார பெண்ணே தவறாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.