திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கொடுவாய் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த போலி மருத்துவமனை மற்றும் மருந்து கடைக்கு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் கொடுவாய் பகுதியில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக மருந்து கடைகள் மற்றும் மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
இதனையடுத்து, இன்று மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனக ராணி தலைமையிலான அதிகாரிகள் கொடுவாய் பகுதியில் திருப்பூர் - தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வணிக வளாகங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் சுகம் மருத்துவமனை மற்றும் சுகம் மருந்து கடை ஆகியவை அரசு விதிமுறைகளின்படி அனுமதி ஏதும் பெறாமல் இயங்கி வந்தது ஆய்வில் தெரிய வந்தது.
இதையடுத்து, சுகம் மருத்துவமனை மற்றும் மருந்துக் கடையின் ஷட்டரை பூட்டி, பூட்டு போட்டு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.