திருமணம் செய்ததை மறைத்து இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்களில் மும்பையை சேர்ந்த தொழிலதிபரிடம் பழகி ரூ.20 லட்சம் வரை மோசடி செய்த கோவையை சேர்ந்த பள்ளி ஆசிரியை மீது போலீசார், 420, 406, 506(2) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை: திருமணம் செய்ததை மறைத்து மும்பை தொழில் அதிபரை ஏமாற்றி பணம் பறித்த கோவையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை மீது போலீசார் 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ராஜேஷ் (44). இவர் செம்பூர் ரயில் நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு லோரேன் என்ற பெண்ணுடன் அவரது உறவினர் மூலமாக நட்பு ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் லோரேனின் மூலமாக அவரது சகோதரியான கோவை போத்தனூர் சத்ய சாய் நகர் பகுதியில் வசித்து வரும் ஹேசல் ஜேம்ஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நவநாகரீகமாக மாடர்னாக ஆடை அணிந்து வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை ஹேசல் ஜேம்ஸ் வெளியிட்டு இருந்ததால் ராஜேஷ்க்கு பிடித்துப் போனது.
இதையடுத்து அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஹேசல் ஜேம்ஸ் தான் திருமணம் ஆகாத பெண் என்று கூறி ராஜேஷ் உடன் பழகி வந்துள்ளார். சிறிது நாட்கள் கழித்து தனக்கு திருமணமாகிவிட்டது என்றும் கணவர் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
இருந்தபோதும் ராஜேஷ், ஹேசல்ஜேம்ஸ் உடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். அந்த சமயத்தில் திடீரென ஒரு நாள் ஹேசல் ஜேம்ஸ் தனக்கு திருமணமானது உண்மை என்றும் கணவன் இறக்கவில்லை என்றும் விவாகரத்து வழக்கு கோவை நீதிமன்றத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஹேசல் ஜேம்ஸின் பேச்சில் மயங்கிய ராஜேஷ் அது ஒரு விஷயம் இல்லை என்று கூறி இருக்கிறார். மேலும் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். தந்தையுடன் வசித்து வருவதால் தனக்கு நிறைய கஷ்டங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய ராஜேஷ் 90,000 ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ் தான் சொந்தமாக தொழில் செய்வதாகவும் அதற்கு உதவி செய்யுமாறு கூறியிருக்கிறார். இதனால் ராஜேஷ் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம், அழகு சாதன பொருட்கள், விலை உயர்ந்த செல்போன், ஸ்கோடா கார் ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளார்.
பொருட்களை ஹேசல் ஜேம்ஸ் தனது தந்தை பெயரில் அனுப்புமாறு கூறி வாங்கியுள்ளார். ஸ்கோடா காரை தனது அண்ணன் விவின் கிறிஸ்டோ பெயரில் ஹேசல் ஜேம்ஸ் பதிவு செய்து கொண்டார். ராஜேஷ், ஹேசல் ஜேம்சை மிகவும் நம்பி இருந்த நிலையில் ஹேசல் ஜேம்ஸ்க்கு ராணுவ வீரர் ஜஸ்டின் என்பவரிடம் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
மேலும் இதேபோல பல ஆண்களிடம் ஹேசல் ஜேம்ஸ் பழகி வந்தது ராஜேஷ் நாடாருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் இது குறித்து ஹேசல் ஜேம்ஸிடம் கேட்டுள்ளார். அப்போது ஹேசல் ஜேம்ஸ் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவது நல்லது இல்லை என்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்.
இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ் தொழிலதிபர் ராஜேஷ் உடன் பேசுவதை தவிர்த்து வந்தார். அதன் பிறகு தொடர்பு கொண்ட ராஜேஷ் தன்னுடைய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அப்போது ஹேசல் ஜேம்ஸ் பணத்தை திருப்பி தர முடியாது என்றும் பணத்தை திருப்பி கேட்டால் தான் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்வேன் என கூறி மிரட்டி இருக்கிறார்.
இதனால் பயந்து போன ராஜேஷ் மீண்டும் சில நாட்கள் கழித்து தனது பணத்தை கேட்டுள்ளார். அப்போது ஹேசல் ஜேம்ஸ் 20 லட்சம் ரூபாய் பணத்தை உனக்கு கொடுப்பதற்கு பதில் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் உன்னை கொல்வதற்கு ஆள் இருக்கிறது என கூறி மிரட்டியுள்ளார்.
இதன் காரணமாக பயந்து போன ராஜேஷ் கோவைக்கு வந்து மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணனிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தெற்கு உதவி கமிஷனர் சதீஷ் குமார் தலைமையில் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மும்பை தொழிலதிபர் ராஜேஷிடம் பழகி மோசடி செய்த ஹேசல் ஜேம்ஸ் குறித்து பல்வேறு தகவல்கள் கிடைத்தது.
ஹேசல் ஜேம்சின் தந்தை ஜேம்ஸ் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாய் கோவையில் உள்ள பிரபல பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஹேசல் ஜேம்ஸ்க்கு கல்லூரியில் படிக்கும் பொழுது கோவையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவரின் மகனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ் குடும்பத்தார் போலீஸ் அதிகாரியின் மகனை மதம் மாற கூறியதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வசித்து வருகின்றனர். மேலும் இவர்களுடைய விவாகரத்து வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஹேசல் ஜேம்ஸ் கோவையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிந்து அங்கிருந்து இவரது நடவடிக்கை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு போலீஸ் அதிகாரியின் மகன் தனது குழந்தையை பார்ப்பதற்காக போத்தனூரில் உள்ள ஹேசல் ஜேம்ஸ் வீட்டிற்கு சென்றார்.
அப்போது அங்கிருந்தவர்கள் போலீஸ் அதிகாரியின் மகன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் தங்க நகைகளை பறித்துக் கொண்ட வழக்கு கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே பதிவாகியுள்ளது.
இந்நிலையில் மும்பை தொழிலதிபருடன் பேசி பழகி இருபது லட்ச ரூபாய் வரை பணம் கார் உள்ளிட்ட பொருட்களை வாங்கி ஹேசல் ஜேம்ஸ் ஏமாற்றியுள்ளார்.
கோவையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜஸ்டின் என்பவருடன் பழகி அவரை திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஹேசல் ஜேம்ஸ் தனது முதல் கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதை தொடர்ந்து போத்தனூர் போலீசார் மும்பை தொழிலதிபர் ராஜேஷை ஏமாற்றி பழகி பின்னர் கொலை மிரட்டல் விடுத்த பள்ளி ஆசிரியை ஹேசல் ஜேம்ஸ் மீது 420, 406, 506(2) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.