பல்லடம் அருகே சின்னக்கரையில் வடமாநில தொழிலாளரை கடத்தி பணம் பறித்த வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு குற்றவாளிகள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், முக்கிய குற்றவாளி டாட்டூ தினேஷை பிடிக்க நான்கு தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்பூர்: பல்லடம் அருகே வடமாநில தொழிலாளரை கடத்தி பணம் பறித்த வழக்கில் இருவர் சரணடைந்த நிலையில், முக்கிய குற்றவாளியை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தை சேர்ந்தவர் பஜுலு மண்டல் என்பவரது மகன் ஷாஜி மண்டல். இவர், பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் இரவு இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வடமாநில பெண் ஒருவர், வேலை இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் வேலை இருந்தால் தெரிவிக்குமாறும் பண உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.
அந்த பெண்ணுக்கு உதவி செய்வதற்காக அந்த பெண் வரச்சொன்ன சின்னக்கரை பேருந்து நிலையம் அருகே ஷாஜி மண்டல் சென்றுள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம ஆசாமிகள் ஷாஜி மண்டலை கடத்திச் சென்றுள்ளனர். அவரிடம் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம், பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அவரை திருப்பூர் அரசு மருத்துவமனை அருகே இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து, ஷாஜி மண்டல் பல்லடம் காவல்துறையில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் பேசிய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அஜித் என்பவரது மனைவி சுக்லா என்ற பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த பெண்ணும் அவருடன் வந்த நான்கு பேரும் சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, பல்லடம் போலீசார் 4 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நாகப்பட்டினத்தை சேர்ந்த கிளின்டன் மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஆகிய இருவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நீதிமன்றத்தில் நேற்று இரவு சரணடைந்துள்ளனர்.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களை கடத்தி பணம் பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் முக்கிய குற்றவாளியான சென்னையை சேர்ந்த டாட்டூ தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.