தமிழகத்தில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளில் மையிட்டு அழிப்போம் என்ற நிலைபாட்டை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை: ஈரோட்டில் வரும் மே மாதம் 5 ஆம் தேதி வணிகர் தின மாநில மாநாடு நடைபெறுகிறது. இது குறித்த கோவை மண்டல சிறப்பு ஆலோசனைக் கூட்டம், கோவை சாய்பாபா காலனி உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துக் கொண்ட பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:
வணிகர் உரிமை மாநாட்டில் லட்சக்கணக்கான வணிகர்கள் பங்கேற்க உள்ளனர். அனைத்து மாநில தலைவர்கள், மாநில அமைச்சர்கள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மேலும் 5 ஆண்டு என்பதை ஓராண்டாக உணவு தர நிர்ணயம் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், ஜி.எஸ்.டி.யை எளிமையாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மாநாட்டின் மூலம் வலியுறுத்தப்படும்.
ஏப்ரல் 18"ஆம் தேதி டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். எம்.ஆர்.பியைக் கொண்டு வணிகர்களை வஞ்சிக்கும் கார்ப்ரேட்டிற்கு அரசு துணை போவதாக தோன்றுகிறது.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை வரைமுறைப்படுத்த வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ், தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளில் மையிட்டு அழிப்போம் என்ற நிலைபாட்டை தவிர்க்க வேண்டும்.
இவ்விவகாரத்திற்கு, ஒரு மாத அவகாசம் என்பது போதாது. எங்கள் அமைப்பு சார்பில் அனைத்து வணிகர்களுக்கு தமிழ் மொழியில் பெயர் பலகை வைக்கக்கோரி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.