கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, சிவப்பு நிற பட்டுடுத்தி வெள்ளி தேரில் உலாவவந்த அம்மனை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர்.
கோவை: பொள்ளாச்சி வாழ் மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் தேர் திருவிழா, கடந்த பங்குனி மாதம் முதல் செவ்வாய் கிழமை நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் பூவோடு எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வந்தனர். நேற்று காலை மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாரியம்மன் வெள்ளி தேரில் திருவீதி உலா நேற்றிரவு நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் சிவப்பு நிற பட்டுடுத்தி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனை ஆயிரக்கணக்கான மக்கள் பக்தியுடன் தரிசனம் செய்தனர். அதர்மத்தை நீக்கி தர்மத்தை நிலை நாட்ட மாரியம்மன் சிவப்பு நிற பட்டுடுத்தி உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் சுபிட்சத்தை அருளவும், அம்மன் கருணையால் மக்கள் எல்லா வளங்களும் பெறவேண்டியும் இந்த திருவீதி உலா நடைபெறுவதாக அர்ச்சகர் தியாகராஜன் தெரிவித்தார்.