திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சொத்து பிரச்சனைக்காக ஆனந்த் என்பவரை, சக உறவினர்களே சாலையில் கயிற்றால் கட்டிப்போட்டு தாக்கினர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே படியூர் பகுதியில் ஏசையன் என்பவருக்கும் ஆனந்த் என்பவரின் தாய்க்கும் சொந்தமான வீடு உள்ளது.
ஆனந்த் என்பவர் ஏசையனின் சொந்த அக்கா மகன்.இந்நிலையில், பாகப்பிரிவினை ஏற்படுத்தப்பட்ட நிலையில், ஆனந்த்தின் தாய்க்கு வரவேண்டிய பணத்தை, ஏசையன் தராமல் காலம் கடத்தி வந்துள்ளார்.
இதுகுறித்து, கடந்த 14ஆம் தேதி ஆனந்த், ஏசையன் வீட்டுக்கு சென்று கேட்டபோது, ஏசையன் அப்பகுதி இளைஞர்களை அழைத்து ஊர்விட்டு ஊர்வந்து சொத்தில் பங்கு கேட்பதாக கூறி, ஆனந்த்தை அங்கிருந்த இளைஞர்கள் உதவியுடன் கயிற்றின் மூலம் கட்டி சுமார் 3 மணி நேரம் வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கயிறுகளை அவிழ்த்து விட்டதாகவும், காயமடைந்த ஆனந்த் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்றதாகவும் தெரிகிறது.
இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் கூட, தன்னை தாக்கியவர்கள் மீது புகார் வழக்கு பதிவு செய்யாமல் தன் மீதும் இந்த பிரச்சனையில் சம்பந்தமில்லாத தனது தம்பி ஜெயக்குமார் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்ததாக ஆனந்த்குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 14ஆம் தேதி சம்பவம் நடைபெற்ற நிலையில், ஆனந்த் தாக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.