போத்தனூர் ரயில் பயனாளர் சங்கம் சார்பில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனை பிரச்சார பயணம் நடைபெற்றது. இதில், கோவையில் இருந்து எர்ணாகுளம் வழியாக ஆலப்புழாவிற்கு பயணிகள் ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோவை: போத்தனூர் ரயில் பயனாளர் சங்கம் சார்பில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனை பிரச்சார பயணம் நடைபெற்றது.

போத்தனூர் ரயில் பயனாளர் சங்கம் சார்பில் இன்று தெருமுனை பிரச்சார பயணம் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இன்று காலை 8 மணி அளவில் போத்தனூரில் இந்த தெருமுனைப் பிரச்சார பயணம் தொடங்கியது.

இந்தப் பயணம் போத்தனூர் கடைவீதி, மேட்டூர் ஜிடி நாயுடு டேங்க், கோணவாய்க்கால் பாளையம், வெள்ளலூர், செட்டிபாளையம், சிட்கோ, கோவை புத்தூர், இடையர்பாளையம் பிரிவு, குனியமுத்தூர் ,ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவு, சுந்தராபுரம், வந்தடைந்தது.
இதனையடுத்து மதிய உணவுக்குப் பின்னர் மீண்டும் சுந்தராபுரத்தில் இருந்து புறப்பட்டு உக்கடம், பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி, சாய்பாபா கோவில், வடகோவை, ஒலம்பஸ், ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம்,போன்ற பகுதிகளில் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றது.
இந்த தெருமுனை பிரச்சார பயணத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு,
1. போத்தனூர் வழியாக செல்லக்கூடிய பெரும்பாலான ரயில்கள் மற்றும் கடந்த காலத்தில் நின்று சென்ற வண்டிகள் மீண்டும் போத்தனூரில் நின்று செல்ல வேண்டும்.
குறிப்பாக
கோவை மங்களூர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் - 22610 / 22609
எர்ணாகுளம் காரைக்கால் எக்ஸ்பிரஸ் - 16188 / 16187
எர்ணாகுளம் பெங்களூர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் - 12678 /12677
சென்னை திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் - 12696 /12695
போன்ற வண்டிகள் உடனடியாக நின்று செல்ல வேண்டும்.
2. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரை இயக்கப்படக்கூடிய Wiesteng MEMU ரயில் போத்தனூர் வரை நீட்டிக்கப்பட வேண்டும்.
3. கோவையில் இருந்து எர்ணாகுளம் வழியாக ஆலப்புழாவிற்கு பேசஞ்சர் ரயில் இயக்கப்பட வேண்டும்.
4. கோவை, போத்தனூர், திண்டுக்கல் குறுகிய ரயில் பாதையாக இருந்ததை அகல ரயில் பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. இந்த தடத்தில் ஏற்கனவே இயங்கி வந்த கோவை - ராமேஸ்வரம், கோவை - தூத்துக்குடி, கோவை - மதுரை, கோவை - திண்டுக்கல், கோவை - செங்கோட்டை போன்ற வண்டிகளை உடனடியாக மீண்டும் இயக்கப்பட வேண்டும் அவையும் போத்தனூரில் நின்று செல்ல வேண்டும்.
5. கோவை வாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக கோவையிலிருந்து பெங்களூருக்கு இரவு ரயில் இயக்கப்பட வேண்டும்.
6. போத்தனூர் ரயில் நிலையத்தை கோவையின் இரண்டாம் ரயில் முனையமாக அறிவிக்கப்பட வேண்டும். மேலும் போத்தனூரில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் சில ரயில்களை போத்தனூரில் இருந்து புறப்பட்டு சசல்ல வேண்டும்.
7: கிணத்துக்கடவு, செட்டிபாளையம், பொள்ளாச்சி போன்ற பகுதிகளை கேரளா மாநீலம் பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு தமிழ்நாடு சேலம் கோட்டத்தில் இணைக்கப்பட வேண்டும்.
8. கோவையை தலைமையாக கொண்டு புதிய கோவை ரயில்வே கோட்டம் அலுவலகம் துவங்கப்பட வேண்டும். Coimbatore Railway Division Office.
9. கோவை வாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம் சில வண்டிகளை வடகோவையிலும், பீளமேட்டிலும் சில வண்டிகள் நின்று செல்வதன் மூலம் கோவை வாழ் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
10. அமிர்தா எக்ஸ்பிரஸ் மற்றும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், பொள்ளாச்சியில் இருந்து கோவை வரை நீட்டிக்கப்பட வேண்டும்.
11. கடந்த காலத்தில் பல வருடங்களாக நடைமுறையில் இருந்த ரயில் கட்டணத்தில் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன. அதை ரயில்வே அமைச்சகம் மற்றும் மத்திய அரசும் ரத்து செய்துள்ளது. மீண்டும் மூத்த குடிமக்களுக்கான சலுகையை வழங்கப்பட வேண்டும்
இவ்வாறு அந்த அமைப்பு வலியுறுத்தியது.