கோவை கருமத்தம்பட்டி அருகே தனியார் நிறுவனத்தின் ராட்சத விளம்பர பேனர் பொருத்தும் பணியின் போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாரம் சரிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.
கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பிளக்ஸ் பேனர் வைக்கும் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருமத்தம்பட்டி அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே அவிநாசி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ராமசாமி என்பவரது இடத்தில் ராட்சத பேனர்கள் வைக்கும் பணி இன்று மாலை நடைபெற்றது. இந்த பணியை சேலத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் எடுத்து செய்து வந்ததாக கூறப்படுகிறது.

பேனர் அமைக்கும் பணியின் போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாரம் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் குமார், குணசேகரன், சேகர் என்ற 3 தொழிலாளர்கள் சாரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் பேனர்களை அகற்றி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள கருமத்தம்பட்டி போலீசார் தலைமறைவாக உள்ள காண்டிராக்டர் பழனிசாமியை தேடி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக உயரத்தில் பேனர்கள் அமைக்கப்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவித்தனர்.