கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று, உக்கடம், கரும்புக்கடை, குனியமுத்தூர், ரயில் நிலையம், காந்திபுரம் கனமழை வெளுத்து வாங்கியது. இதனிடையே, ரத்தினபுரி அருகே இடி விழுந்ததில் தென்னை மரம் பற்றி எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை: கோவையில் இன்று கனமழையின் போது இடி விழுந்ததில் தென்னை மரம் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் இடையர்பாளையம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அதனை தொடர்ந்து தினமும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாநகரில் உக்கடம், கரும்புக்கடை, குனியமுத்தூர், ரயில் நிலையம், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

குறிப்பாக உக்கடம், கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் கருமேகங்கள் சூழந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.
அதே சமயம் உக்கடம், கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் பல்வேறு இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை மேம்பாலங்களுக்கு அடியில் நிறுத்திவிட்டு ஒதுங்கினர்.

அப்போது மேம்பாலங்களில் இருந்து விழுந்த மழைநீர் தொடர் நீர் வீழ்ச்சிகள் போல் காட்சியளித்தது.

இந்நிலையில் கோவை ரத்தினபுரி அடுத்த சாஸ்திரி வீதியில் பலத்த மழை பெய்த நிலையில் இடி விழுந்து தென்னை மரம் பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.